Contact Information

பொன்னுலகம் புத்தக நிலையம்
4/413 பாரதி நகர், 3வது வீதி,
பிச்சம்பாளையம்
திருப்பூர் - 641603
+91 8610193433
+91 7010484465
ponnulagampuththaganilaiyam@gmail.com

தலைநகரம் படத்தில் வடிவேலு ரவுடியாக போஸ் கொடுக்க முயல்வார். எப்படி கொடுத்ததும் நன்றாக வராது. உடனே ஒரு சப்போர்டுக்காக ஓமக்குச்சி நரசிம்மனை தூக்கி விதவிதமாக வைத்து போஸ் கொடுப்பார். அதுபோல எப்போதும் செட் பிராப்பர்ட்டியாக பயன்படும் ஒருவர் ராமர். வலதுசாரி சித்தாந்தவாதிகளுக்கு எப்போதும் கைகொடுக்கும் பெருமைக்குரியவர். இந்தமுறை காவி வலதுசாரிகள் அவரை செட் பிறப்பர்ட்டியாக கையில் எடுக்காமல் நீல வலதுசாரிகள் கையிலெடுத்துள்ளனர். ஆனால் எப்படியாயினும் அவர்களுக்கு இலக்கு ஒன்றுதான். ராமனை வைத்து விளம்பரம் தேடிக்கொள்வது. அதில் வெற்றியும் பெற்றுவிட்டார்கள். வழக்கம்போல திமுக அரசு ஏணி சின்னத்தில் ஒரு குத்து, பனைமர சின்னத்தில் ஒரு குத்து என்பதுபோல், கேசும் போட்டுவிட்டு கட்சியின் நிரந்தர ஆதரவாளர்களான ஸ்டாலினைவிட திமுகவின் மீது விசுவாசமுள்ள, துணை அமைப்புகளை வைத்து இல்லாத ராமனைக் கண்டித்தும் ஆயிற்று. எப்போதும்போல இந்த சமாச்சாரத்தில் பெரிதும் சங்கடப்பட்டுப்போனவர்கள் நம்மூர் புரட்சிகர இடதுசாரிகளும், இடதுசாரி புரட்சியாளர்களும்தான். இவர்களுக்கு இதை ஆதரிப்பதா எதிர்ப்பதா என்று புரியவில்லை. ஆதரித்தால் மார்க்சியத்திலிருந்து விலகி வறட்டு நாத்திகவாதம் பேச வேண்டியதிருக்கும். எதிர்த்தால் பிற்போக்கு என்று பட்டம் வாங்கவேண்டியதிருக்கும் என்ற பயத்தில், மார்க்சியம் முக்கியமா முற்போக்கு என்று நிறுவவேண்டியது முக்கியமா என்ற யோசனையில் முற்போக்கு என்று நிறுவுவதற்காக மார்க்சியத்தை கைவிட வேண்டி வந்தது. மலச்சிக்கல்போல நித்ய சங்கடம் இந்த இடதுசாரிகளுக்கு.

இந்த நித்ய சங்கடம் இடதுசாரிகளுக்கு புதிதல்ல. பல விஷயங்களில் நாபிக்கமலத்திலிருந்து கிளம்பி நாக்கு நுனிவரை வரும் வார்த்தைகளை அப்படியே எச்சிலை முழுங்குவதுபோல் முழுங்கிவிட்டு எடப்பாடி அய்யா போல கடவாப்பால் தெரிய சிரித்தபடி வேறொரு கருத்தை சொல்வதே இவர்களுக்கு வாடிக்கை. ஏனென்றால் வெளிப்படையாக சொன்னால் பொலிட்பீரோ திறந்துபார்க்கப்படும் என்ற சங்கடம் அவரக்ளுக்கு. சரி சிபிஎம்முக்கு இந்த சங்கடம் என்றால் சிபிஐக்கு ‘அம்மா சத்தியமா என்சிபிஹெச் என்னுது’ என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயம். அப்படி என்னதான் என்சிபிஹெச் இடதுசாரி பதிப்பகமாக இருந்துவிட்டது? பொன்னியின் செல்வனிலிருந்து, நேற்று வந்த முத்துமோகனின் மார்க்சிய எதிர்ப்பு கருத்துகள் வரை எல்லாவற்றையும் பதிப்பித்து தள்ளும் பதிப்பகம் இடதுசாரி பதிப்பகமா? ரஷ்யாவிலிருந்த மாஸ்கோ பதிப்பகத்துடன் டேக் போட்டு கல்லா கட்டியதைவிட என்சிபிஹெச் என்ன சாதித்தது? ஆயினும் ராஜதுரை என்ற ஒரு மார்ஸ்கிய எதிர்ப்பாளர் அம்பலப்பட்டுப்போனதுதான் இந்த பிரச்சினையின் ஒரே சாதனை. 

முதுபெரும் தோழரான நல்லக்கண்ணுவை ஏமாற்றி கையெழுத்து வாங்கி என்சிபிஎச் பங்குகளை சரவணன் என்பவர் தன சொந்த பங்குகளாக மாற்றிக்கொண்டுவிட்டதாக குற்றச்சாட்டு. வயதாகி விட்டதால் தெரியாமல் கையெழுத்து போட்டுவிட்டாராம். வயதாகி விட்டது, எதையும் சரியாக கவனிக்க முடியவில்லை, இப்படி ஒரு மாபெரும் அமைப்பின் சொத்துக்களை திருடுவதற்கு தெரியாமல் கையெழுத்து போட்டுவிட்டேன் எனும் நிலையில் இருப்பவர் எதற்காக பொறுப்பில் இருக்க வேண்டும்? ஒரு பொலிட்டிக்கல் ரிட்டையர்மெண்ட் பெறுவதில் என்ன தவறு? யார் இவரைத் தடுக்கிறார்கள்? கட்சி பராமரிப்பில் ஓய்வெடுப்பதில் எந்த பிழையுமில்லையே. இப்படி மரியாதையோடு ஒதுக்கிவிட வேண்டியவரின் மரியாதையைக் கெடுக்கும் விதமாக அடுத்த சம்பவம் நிகழ்கிறது. நல்லக்கண்ணு ‘தெரியாமல்’ கையெழுத்து போட்ட சமாச்சாரம் குறித்த சந்தேகங்களை ஒருவர் கட்சிக்குள் எழுப்புகிறார். விசாரணை நடத்தவேண்டும் என்று கூறுகிறார். நல்லக்கண்ணு இப்படி ‘தெரியாமல்’ கையெழுத்து போடும் நிலையில் இருக்கும்போது அவரை ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவராக வைத்திருப்பது தகுமா என்று கேட்கிறார். நியாயமான கேள்விதான். நாளைக்கே ஆணவக்கொலைகளுக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் நடத்தி அதில் முதல் கையெழுத்து இடும்படி நல்லக்கண்ணுவிடம் கேட்க, அவரும் ‘தெரியாமல்’ கையெழுத்து போட்டுவிட்டால் காரியமே கெட்டுவிடுமே. அதனால் பொலிட்டிக்கல் ரிட்டையர்மெண்ட் கொடுப்பதில் எந்த பிழையுமில்லை. வேண்டுமானால் உப்புச்சப்பில்லாத கௌரவ பதவி கொடுத்து அழகு பார்க்கலாம். ஆனால் கம்யூனிஸ்ட்களின் ஜனநாயக மதியத்துவ ட்விஸ்ட் இங்கேதான் வருகிறது. விசாரணைக்கு உட்படுத்த வேண்டியவரை விட்டுவிட்டு, விசாரணை வேண்டுமென்று கோரியவரை சஸ்பெண்ட் செயகிறார்கள். ஆகா இதுவல்லவா ஜனநாயகம்! 

“திருடன் திருடன்” என்று கத்தினேன்.

அமைதிக்குப் பங்கம் விளைவித்தாக என்னைக் கைது செய்து விட்டார்கள்.

என்ற கவிக்கோ அப்துல் ரகுமானின் கவிதை வரிகள் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.

(இதை எழுதிய பின்னர் என்சிபிஎச் பிரச்சினையை கட்சி கையாண்டுவிட்டது ஆயினும் சந்தேகங்கள் அப்படியே இருக்கின்றன)

இவர்களுக்குத்தான் இந்த சங்கடம் என்றால். அதி தீவிர புரட்சியாளர்களான மார்க்சிய லெனினிய கட்சி என்ன செய்கிறது. ராஜதுரையையும், அ.மார்க்ஸையும் தனது மேடைகளில் மார்க்சிய அறிஞர்களாக ஏற்றிக்கொண்டிருக்கிறது. தங்கள் பொதுச்செயலாளரான திபங்கர் பட்டாச்சார்யாவுக்கு அம்பேத்கர் சுடர் விருது வாங்குவதற்காக விடுதலை சிறுத்தைகளுடன் லாபி செய்வதையே சிபிஐ-எம்எல் விடுதலையின் மாநில செயலாளர் ஆசைத்தம்பி பெரும் சாதனையாக செய்து கொண்டிருக்கிறார். அன்பு தோழர்களே! ராமதாசுக்கும் அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்பட்டது என்பதை மறந்துவிடாதீர்கள். இப்படி துண்டு போடுவதிலும் துண்டு வாங்குவதுமாக அரசியல் செய்துகொண்டு மார்க்சிய கோவணத்தை தவற விடுகிறது. இப்படி துண்டு அரசியல் செய்துதான் கட்சி முகங்களில் ஒருவராக அறியப்பட்ட கவிதா கிருஷ்ணன் ‘ஸ்டாலினிஸம்’ குறித்த விமர்சனம் செய்து கட்சியிலிருந்து விலகினார். அது தனியாக எழுத வேண்டிய கட்டுரை அளவு பெரிய கதை என்பதால் அதை இங்கே சேர்க்கவில்லை. ஆயினும், கட்சி உயர்மட்ட தலைவர்களுக்கே இந்தளவுதான் அரசியல் புரிதல் என்பது பரிதாபம்தான்.

தொண்ணூறுகளின் தொடக்கத்தில் மார்க்சிய லெனினிய இயக்கங்களை ஒன்றிணைத்து கட்சி கட்ட மாநாடு நடந்தது. அதை நடத்த வினோத் மிஸ்ரா வந்திருந்தார். அப்போது மேடையில் ஒரு சூட்கேஸ் இருந்தது. என்ன சூட்கேஸ் என்று விசாரித்ததில், ‘மாநாடு வெற்றிபெற வாழ்த்துகளுடன் ஒருவர் தந்துவிட்டுப் போனதாக’ சொன்னார்கள். சூட்கேஸை திறந்து பார்த்தால் கட்டுக்கட்டாக பணம். அத்துடன் ஒரு குறிப்பு. ‘தங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள்’ என்று. உடனே வினோத் மிஸ்ரா பெட்டியை மூடினார். சில தோழர்களை அழைத்து சூட்கேஸை கொடுத்துவிட்டுப் போனவரை தேடி கண்டுபிடித்து திருப்பிக்கொடுத்துவிட்டு வருமாறு சொன்னார். அரைமணிநேரம் தேடிக்கண்டுபிடித்து சூட்கேஸைக் கொடுத்துவிட்டு வந்தபிறகே கட்சி மாநாடு தொடங்கியது. வினோத் மிஸ்ரா எதற்காக பணத்தை திருப்பிக் கொடுக்க சொன்னார். நமக்கு வழங்கப்படும் சன்மானங்கள் எதுவும் பிரதிபலன் பாராமல் வழங்கப்படுவதில்லை. இன்று அவர்களின் பணத்தை நாம் தொட்டால், நாளை அவர்களுக்கு சாதகமாக செயல்பட வேண்டியதிருக்கும் என்ற புரிதல் வினோத் மிஸ்ராவுக்கு இருந்தது. அதனால்தால் கட்சி லெவியே கட்சியை நடத்தப் போதுமானது. ஏனென்றால் கட்சி தொழிலாளர்களுக்கு கட்டுப்பட்டதாக எப்போதும் இருக்க வேண்டும் என்று எண்ணினார். ஆனால் இன்று இப்படி முதலாளித்துவ அடிவருடிகளின் பின்னால் கட்சி நிற்பது தெரிந்தால் வினோத் மிஸ்ராவின் ஆன்மாவுக்கு இன்னொரு மாரடைப்பு வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. 

மற்ற எம்எல் குழுக்களைப் பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை. சக்கரை என்று பேப்பரில் எழுதி நக்கும் சுகர் பேஷண்டைப்போல் முற்போக்கு என்று எழுதினாலே ஆதரிக்கும் வெறி அவர்களுக்குள் ஊறிக்கிடக்கிறது. அதனால்தான் மீதா. பாண்டியன் தொடங்கி எல்லாரும் விடுதலை சிகப்பிக்கு ஆதரவாக களமாடிக்கொண்டிருக்கின்றனர். இப்படி புரட்சிக்காரர்களாக தொடங்கி, அரைகுறை வறட்டு நாத்திகத்தை ஆதரிக்கிறேன் என்ற பெயரில் வறட்டு நாத்திகவாதிகளை புரட்சிக்காரர்களாக்கி அவர்கள் கோஷத்தை தங்கள் வாயால் முழங்கும் அல்லக்கைகளாக புரட்சியாளர்கள் மாறிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த சங்கடம் வெகுகாலமாகவே இருக்கின்றது. சில வருடங்களுக்கு முன்பு கட்டற்ற பாலியல் சுதந்திரம் என்றொரு குழு அப்பாவி பெண்களை மூளை சலவை செய்து பாலியல் சுரண்டலில் ஈடுபட்டனர். ஆனாலு அதையும் எதிர்ப்பதற்கு நம்மூர் இடதுசாரிகளுக்கு சங்கடம். இடதுசாரியாக காட்டிக்கொள்ளும் சுந்தரவள்ளி ஆதரிக்க வேறு செய்தார். வர்க்க சுரண்டல் இன்னும் தீராத சமூகத்தில் பாலியல் சுதந்திரம் என்பது பெண்களை சுரண்டதான் பயன்படும் என்ற மார்க்சிய அடிப்படை கூட தெரியாதவர்கள் என்ன மாதிரியான இடதுசாரிகள்? குறைந்தபட்சம் பெண்கள் மீது குடும்பத்திலும் பணியிடங்களிலும் நிகழ்த்தப்படும் பாலியல் சுரண்டல்கள் பற்றி கூரு இந்த இடதுசாரி தலைவர்களுக்கு இருக்கின்றதா? இதையெல்லாம் கண்டாலே இது ஒரு அயோக்கியத்தனமான குழு என்பதும், இதற்குப்பின்னால் திராவிட வலதுசாரிக் கட்சிகளின் ஆதரவு இருப்பதும் தெரியவே செய்தது. ஆனால், இப்படி ஒரு அநியாயம் நடப்பது தெரிந்தும் தங்கள் ‘முற்போக்கு’ பட்டத்தைக் காப்பாற்றிக்கொள்வதற்காக கண்டும் காணாமல் போனவர்கள் எவ்வளவு பெரிய அயோக்கியர்கள்? இவர்களை நம்பி எப்படி ஒரு இடதுசாரி இயக்கத்தை வளர்த்தெடுக்க முடியும்? இந்த விஷயங்களை பேச ‘சங்கடப்பட்டுக்கொண்டு’ பாலியல் சுரண்டலை கண்டுகொள்ளாமல் செல்பவர்கள் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நட்டமாக நிறுத்திவிடுவார்கள் என்று நம்பிவிட முடியுமா?

சரி இன்றைய பிரச்சினைக்கு வருவோம். ராமனை மலக்குழியில் இறங்க வைப்பதுபோல் ஒரு மொக்கை கவிதையை எழுதி கைத்தட்டல் பெறுகிறார். இதுபோன்ற பிரச்சார கவிதையை இடதுசாரிகள் எழுதியிருந்தால், ‘இலக்கிய தரத்தை’ கெடுப்பதாக கூவும் லும்பன் இலக்கியவாதிகள் கும்பலிலிருந்து இந்த கவிதை எழுகிறது. சரி போகட்டும். கவிதையைப் படித்து கைதட்டல் பெறுகிறார். உடனே இந்துமுன்னணியினர் பிற மதங்களைக் குறித்தும் இதுபோன்ற கவிதைகள் எழுதுவோம் என்று எச்சரிக்கின்றனர். அறிக்கைகள் விடுகின்றனர். இந்து முன்னணியினர் எதிர்த்தால் அதை கண்மூடித்தனமாக ஆதரிக்க வேண்டும் என்று புரோகிராம் செய்யப்பட இடதுசாரிகளும் விடுதலை சிகப்பிக்கு ஆதரவாக களமாட தொடங்குகின்றனர். கொஞ்சம் தள்ளி நின்று இந்த பிரச்சினையை அவதானித்துப் பாருங்கள். ஒரு வறட்டு நாத்திகவாதி (அவன் நாத்திகவாதிகூட கிடையாது பௌத்த மதவாதி) கவிதை படிக்கிறான். வலதுசாரி மதவெறியர்கள் அதை எதிர்க்கிறார்கள். இப்போது இடதுசாரிகள் என்ன செய்ய வேண்டும்? ‘குமாரு இது உனக்கும் அவனுக்கும் பர்சனல் பிரச்சினை, நடுவுல நாங்க வந்தா கேங் வார் ஆயிடும்’ என்பதுபோல் தங்கள் வேலையைப் பார்க்கலாம். நிலாவைப் பார்த்து எதுவோ குரல் எழுப்பியதுபோல் தானாக வாய் வலித்ததும் அடங்கிப்போகும். (டிஸ்கி: இங்கு எது நிலா எது அது என்று குறிப்பிடப்படவில்லை). குறுக்கே புகுந்ததனால் இடதுசாரிகள் சாதித்தது என்ன? தங்களை இந்துமத விரோதிகளாக காட்டிக்கொண்டு, ஒரு வறட்டு நாத்திகவாதியை புரட்சியாளனாய் மாற்றியதுதான். “யூ கோ மேன். ஒய் மீ?” என்பதுபோல் மதத்தை பற்றி நீங்களே பேசிக்கோங்க, நாங்க பொருள்முதல்வாதி என்று சொல்ல ஒருவருக்கும் திராணி இல்லை. ஏனென்றால் முற்போக்கு என்ற தோளில் போடப்படும் மாலைக்காக பல்லிளித்தபடி கோவணம் கட்டவில்லை என்று தெரிந்தும் இடுப்பு வேட்டியான மார்க்சியத்தை நழுவவிடும் அறிவாளிகளே இன்று கம்யூனிஸ்ட்களாக காட்டிக்கொண்டுள்ளனர்.

மலக்குழி மரணங்களுக்காக ஆதரிப்பதாக சொல்லிக்கொள்பவர்கள் விட்னஸ் படம் வந்தபோது அதைப்பற்றி ஒரு நீல வலதுசாரியாவது மூச்சு விட்டானா என்று யோசித்துப்பார்த்தார்களா? பிறகெதற்கு வாண்டடாக வந்து வண்டியில் ஏறும் ரவுடி போல் தானாக சென்று ஆதரவளிக்க வேண்டும்? சரி போகட்டும்! இந்த நீல வலதுசாரிகள் தலைவனான ரஞ்சித் திருடிய மெட்றாஸ் கதைக்கு சொந்தக்காரரான கோபி ‘அறம்’ என்றொரு படம் எடுத்தார். படத்தின் கருத்துக்களை விட்டுத்தள்ளலாம். ஒரு முக்கியமான குறியீட்டை முன்வைத்தார். சந்திரனுக்கு ராக்கெட் விடும் தொழில் நுட்பத்தை கண்டுபிடித்த நாடு, போர்வெல் குழிகளுக்குள் விழும் குழந்தைகளைக் காப்பாற்ற ஒரு கருவியும் கண்டறியவில்லை என்பதுதான் அந்த குறியீடு. அதுபோன்ற கேள்வியை எழுப்புவதுதானே ஆக்கப்பூர்வமானது? சொந்தமாக ராக்கெட் தொழில்நுட்பம் இருக்கும் நாட்டில் மலக்குழியை சுத்தம் செய்ய தொழில்நுட்பம் இல்லை என்ற விமர்சனம்தானே ஆக்கப்பூர்வமானது. அதைவிடுத்து பிளவு சக்திகளுக்கு தூபம் போடுவதுபோல கவிதைகளால் யாருக்கு லாபம்? கறுப்பர் கூட்டம் கந்தசஷ்டி கவசத்தை விமர்சனம் செய்தபோதும் இதுதான் நிகழ்ந்தது. அது எதிர்மறை விளைவை ஏற்படுத்தி இந்துத்துவ சக்திகளை மக்களுடன் நெருங்கவே அது உதவியது. அது ஓட்டுக்களாக மாறாததற்கு காரணம் திமுகவுக்கு மாற்று சக்தியாக வளரவில்லை என்பதுதான். திமுகவுக்கு மாற்று பாஜகதான் என்ற நிலை ஏற்பட்டால் இதுபோன்ற வறட்டு நாத்திகவாத கருத்துக்கள் வலதுசாரிகளுக்கே ஆதரவாக முடியும்.

கனிமொழியிடம் ஒரு பேட்டியின்போது தனது மகனுக்கு தான் சொல்லிக்கொடுத்த நாத்திகம் பற்றி அருமையான ஒன்றை சொல்வார். ‘உனது பிரச்சினைகளிலிருந்து தப்பி சாய்ந்துகொள்ள தேவைப்படும் தோள்தான் கடவுள். ஒருவேளை கடவுளை நீ புறக்கணித்தால் நீ சாய்ந்துகொள்ள வேறெந்த தோளும் இருக்காது. உன் தோளில்தான் சாய்ந்துகொள்ள வேண்டும்’ என்று தனது தனது மனதுக்கு அறிவுறுத்தியதாய் சொல்வார். அவ்வளவுதானே! வலிந்து திணிக்கும் நாத்திகத்தால் இதை சாதிக்க முடியுமா? மார்க்ஸ் மதத்தைப் பற்றி என்ன சொல்கிறார்? மக்களுக்கு மதத்தின் தேவை இருக்கும்வரை மதம் இருக்கும். சுரண்டலற்ற சமூகத்தில் மதத்துக்கான தேவை தீர்ந்தபின் மதமும் தானாக அழிந்துபோகும். இந்த மிகச்சிறிய கருத்து கூட புரிந்துகொள்ள முடியாமல் வறட்டு நாத்திகவாதியான பெரியாரை உயர்த்திப்பிடிக்கும் இடதுசாரிகள் எப்படி பொருள்முதல்வாதிகளாய் இருக்க முடியும்? அந்தணர்களை மலக்குழியில் இறங்க சொல்வதுபோல் கவிதை எழுதியதால்தான் இவ்வளவு பிரச்சினை, எல்லாம் பார்ப்பனிய சதி என்று வழக்கம்போல திராவிட கும்பல்கள் கூச்சலிடுகின்றனர். ஆனால் சில வருடங்கள் முன்பே நக்கலைட்ஸ் யூட்யூப் சானலில் பார்ப்பனர்கள் மலம் அள்ளுவதுபோன்ற வீடியோ வெளியிட்டனர். அப்போதெல்லாம் வராத பிரச்சினை இப்போது எதற்காக வருகிறது. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ராமனையும் முருகனையும் மக்கள் சாய்ந்துகொள்ளும் தோளாக எண்ணுகின்றனர் என்பதுதான் நிதர்சனம்.

ஆனால் இவற்றால் யாருக்கு லாபம்? சில தசாப்தங்களுக்கு முன்பு கற்பில் சிறந்தவள் கண்ணகியா சீதையா என்றொரு பட்டிமன்றம் நடந்தது. உடனே இந்துமுன்னணியின் ராமகோபாலன் இந்துக்களை அவமானப்படுத்துவதாக சொல்லி (கண்ணகி – திராவிடம், சீதை – இந்து), தானும் ‘கற்பில் சிறந்தவள் கஜீதாவா, கன்னி மேரியா?’ என்று பட்டிமன்றம் நடத்தப்போகிறோம் என்று அறிவித்தனர். அதைத்தொடர்ந்து அது மதக்கலவரமாக வெடித்து கோவை கலவர பூமியானது. இந்து முன்னணி வளர்ந்தது. இதேபோன்ற ஒன்றைத்தான் இந்த கறுப்பர் கூட்டமும், நீலக்கூட்டமும் செய்கின்றது. இத்தனை நாட்களாக மதுரையின் பெருமையாக இருந்த அழகர் கோவில் திருவிழாவில் விஷ்ணு பஜனை செய்யும் கூட்டமொன்று ஊடுருவி கொஞ்சம் கொஞ்சமாக மக்களை இணைத்து (மார்கழி டைப்) பஜனைகளில் ஈடுபடுகிறது. கூடவே இந்த வறட்டு நாத்திகவாதிகளைப் பற்றிய பிரச்சாரம் செய்யப்பட்டு கலந்துகொண்டவர்களின் விவரங்கள் சேகரிக்கப்படுகிறது. ‘நன்றாக மாளிகை புத்தகத்தில் சுரேஷ் மின்னி சொல்லியிருக்கும் எல்லாவற்றையும் ஆர்.எஸ்.எஸ் தமிழகத்தில் செய்யத்தொடங்கி, வேர்க்கால் மட்ட அளவில் நன்றாக வளர்ந்திருக்கின்றனர். இவர்கள் வளர்ச்சிக்கு இந்த வறட்டு நாத்திகவாதிகள் மாபெரும் காரணமாகவும் உறுதுணையாகவும் இருந்திருக்கின்றனர். இவர்களின் பெரியார் மண் கூச்சலைத் தாண்டி கடந்த இருபது வருடங்களில் ஆர்.எஸ்.எஸ்ஸும் பாஜகவும் தமிழ்நாட்டில் பெருமளவில் வளர்ந்திருப்பது கண்கூடாகத் தெரிகிறது. ஏனென்றால் வறட்டு நாத்திகவாதம் முதலாளித்துவத்தின் கூச்சலாகும் அது எப்படியானாலும் கருத்துமுதல்வாதமாகி எதிர்மறை விளைவுகளையே உருவாக்கும். இப்படி எல்லோரையும் திசைதிருப்பிவிட்டு, ஆத்திகமா நாத்திகமா என்ற விவாதங்களைக் கிளப்பி, அதன் சூட்டில் குளிர் காயவும் கிடைக்கும் விளைவுகளை  அறுவடை செய்ய இந்துத்துவம் தனது ரத்தம் வழியும் கோர நாக்குகளுடன் காத்துக்கொண்டிருக்கின்றது. 

எண்பதுகளில் ராமகோபாலன் போன்றவர்கள் இந்துமுன்னணி போன்ற அமைப்புகளைக் கட்டி வளர்ந்ததற்கு காரணம் இந்து எதிர் இஸ்லாம்/ கிறிஸ்தவர்கள் என்ற ஒரு மாய பிம்பத்தை உருவாக்கி மக்களை இருவேறு பிரிவுகளாக பிரித்து ஆர்.எஸ்.எஸ்ஸை வளர்ப்பது. உலகெங்கும் உள்ள பாசிஸ இயக்கங்கள் கட்டமைத்த பிம்பம் இதுதான். முதலாளித்துவத்தின் தோல்விகளை மறைக்க பொய்யான ஒரு எதிரிகளை சித்தரித்து வளர்த்தெடுப்பதுதான் பாசிஸம். இதற்கு நாம்-பிறர் என்றொரு கோஷம் தேவைப்படுகிறது. ஆனால் இன்றைய சூழலில் தமிழகத்தில் இந்த வாதம் நீர்த்துப்போய்விட்டது. ஏனென்றால் தமிழகம், கலாச்சார புவியியல் அமைப்பு அடிப்படையில் வட மாநிலங்களைவிட வளர்ந்து இருக்கின்றது. கல்வி, உற்பத்தி முறை எல்லாவற்றிலும் முன்னேறியிருக்கிறது. எப்போதுமே உற்பத்தி உறவுகள்தான் சமூக உறவுகளைத் தீர்மானிக்கின்றன. அதனால் இயல்பாகவே, இஸ்லாமியர்கள் மீதோ, கிறிஸ்தவர்கள் மீதோ வெறுப்புணர்வு வட மாநிலங்களை ஒப்பிடும்போது குறைவே. அதனால்தான் இத்தனை வெறுப்புப் பிரச்சாரங்களுக்குப் பிறகும் இந்து, இஸ்லாமியர் மத்தியில் தீராப் பகை என்று ஒன்றும் இல்லாமல் இருக்கின்றது.இதைக் கணக்கிடும்போது முதலாளித்துவத்துக்கு அடுத்த ஒரு இலக்கு தேவைப்படுகிறது. அதற்கு திராவிடக் கட்சிகள் வளர்த்தெடுத்த சாதி இயக்கங்கள் துணையாய் உள்ளன. ஏனென்றால் சாதியை ஒழிப்பதாக வறட்டுப் பிரச்சாரம் செய்த திராவிட கட்சிகள் செய்த சாதனை, பல்வேறு சாதி அமைப்புகளை அவற்றுக்கேயுண்டான கட்டமைக்கப்பட்ட பெருமித பிம்பங்களுடன் வளர்த்தெடுத்ததுதான். இவ்வாறு உருவான சாதி அமைப்புகளை ஒன்றுக்கொன்று எதிராக நிறுத்தி முதலாளித்துவத்துக்கு எதிரான இயக்கங்களை நசுக்கி வருகின்றன. அந்த வகையில் புதிய முற்போக்கான இந்த என்ஜிஓ இயக்கங்கள் தலித் அரசியலை, தலித்துகள் மட்டுமே பேசவேண்டும் என்ற கோஷத்துடன் தங்களை மட்டுமே உண்மையான புரட்சிகர இயக்கமாக காட்டிக்கொள்ள முயல்கின்றனர். அவர்களை எதிர்த்தால் கிடைக்கும் பிற்போக்கு பட்டத்துக்கு அஞ்சி மார்க்சிய கோவணத்தைப் பறக்கவிட்டுவிட்டு கம்யூனிஸ்ட்கள் நிர்வாணமாய் நிற்கின்றனர். முதலாளித்துவ ஊடகங்களோ, பின் லேடனை கம்யூனிசத்துக்கு எதிரான போருக்குப் பயன்படுத்திவிட்டு பின்பு தீவிரவாதியாக்கியதுபோல், இன்று கம்யூனிஸ்ட்களுக்கு எதிராக என்ஜிஓக்களை புரட்சிக்காரன் வேஷமிட்டு இறக்கி வியூகம் வகுக்கின்றனர். எப்படியாயினும் நீலச்சாயம் வெளுக்கவே போகின்றது.

அரசே பிறக்காத காலத்து தத்துவமான பௌத்தத்தை இன்றைக்கு கொண்டுவரப்போகிறேன் என்று பௌத்தம் பேசும் நீல கும்பல் என்றாவது பௌத்த கோவில்களை மீட்க புறப்பட்டிருக்கின்றனரா? ஸ்ரீரங்கம் கோவில் பௌத்த கோவிலாக இருக்கலாம் என்று தெரிவிக்கின்றனர். ஸ்ரீரங்கம் கோவிலை ஆய்வுக்குட்படுத்த வேண்டும் என்று இவர்கள் என்றாவது எழுதியிருக்கிறார்களா? அல்லது தங்களது இலக்கிய ஞானத்தால் பார்ப்பனீயம் திருடிய பௌத்த கோவில்களை வெளிப்படுத்தியிருக்கிறார்களா? ஜெயமோகன் என்றொரு எழுத்தாளர் இருக்கிறார். தீவிர வலதுசாரி. அவர் ஒரு காலத்தில் ‘மாடன் மோட்சம்’ என்றொரு சிறுகதை எழுதினார். எப்படி மக்களின் தெய்வமாக இருந்த மாடன் போன்ற சிறு தெய்வங்களை பார்ப்பனீயம் உள்வாங்கி அதிலிருந்த உழைக்கும் மக்களை வெளியேற்றுகிறது என்பதை விளக்கும் கதை. அதுபோன்ற ஒரு துரும்பைக் கிள்ளிப் போட்டிருப்பார்களா? ஆனால் கோசலை போன்ற கம்யூனிச எதிர்ப்பு குப்பைகளை எழுதுவதற்கு இவர்களின் பேனா தயங்கியதேயில்லை. 

இப்போதுதான் திரைக்கதையில் புதிய ட்விஸ்ட்டாக விடுதலை சிகப்பி கவிதைக்கு களமாடி களைத்தவுடன், அவர் தனது ‘கடவுளுக்கு முன் பிறந்தவன்’ என்ற ஆவணப்படத்தின் வெளியீட்டை அறிவிக்கிறார். ஒரு வாரத்துக்கு முன்பு வெளியிட்டிருந்தால் யாராலும் கவனிக்கப்படாமல் போயிருக்க வேண்டிய போஸ்டர் இன்று களமாடிய தோழர்களின் உதவியால் ஓசி பிரமோஷனில் வந்து நிற்கிறது. தோழர்களின் நிலைமை பரிதாபம்தான். 

மனோதத்துவ நிபுணர்கள் சொல்லும் பிரபலமான ஒரு கூற்று உண்டு. அலுவலகத்திலோ, அல்லது நண்பர்களிடமோ நோ சொல்லிப் பழகுங்கள் என்று சொல்வார்கள். அதுதான் நிம்மதியான வாழ்வுக்கு அடித்தளம். நம்முடைய பெரும்பாலான பிரச்சினைகளுக்குக் காரணம், பிறர் சங்கடப்படுவார்கள் என்று எண்ணி நோ சொல்லாமல் நம்மை நாமே சிரமப்படுத்திக்கொள்வதுதான். எப்படியாவது டைம் மிஷினை கண்டுபிடித்து இறந்தகாலத்துக்கு சென்று ‘நோ சொல்லிப் பழகுங்கள் இடதுசாரிகளே’ என்று மார்க்ஸையோ, லெனினையோ எழுதிவைக்க வேண்டும் என்று எனக்கொரு கருத்துமுதல்வாத ஆசை உண்டு. ஏனென்றால் இன்றைக்கு இடதுசாரிகள் படும் எல்லா சங்கடங்களுக்கும் காரணம் இந்த நோ சொல்லாததுதான். அம்பேத்கார் ஒரு வலதுசாரி முதலாளித்துவவாதி, பெரியார் ஒரு வறட்டு நாத்திகம் பேசும் ஒரு வலதுசாரி நாத்திகவாதி என்பதை உரக்க கூறுவதில் சங்கடப்பட்டுக்கொண்டிருக்கும்வரை கம்யூனிஸ்ட்கள் வளர்வதற்கு வாய்ப்பே இல்லை. திமுகவுக்காக ஊடகங்களில் களமாடும் அருணன், முக.ஸ்டாலினை புரட்சியாளர் ஸ்டாலினுடன் ஒப்பிடும் பாலபாரதி, அப்பட்டமாக திமுகவுக்கு சொம்படிக்கும் சிந்தன், அம்பேத்கர்தான் இந்திய மார்க்ஸ் என்று மார்க்சிய விரோத கருத்துக்களை பரப்பும் டி.ராஜா போன்ற மார்க்சிய முட்டாள்களை தூக்கி எரியும்வரை கட்சிக்கு விடிவுகாலம் கிடையாது. ஏனென்றால் அந்த நோ சொல்வதற்கு தடையாக இருப்பவர்கள் இதுபோன்றவர்கள்தான். குறைந்தபட்சம் அந்தந்த கட்சிகளுக்கு கருத்துகள் உண்டு என்பதை புரிந்துகொள்ளவும் வெளிப்படையாக சொல்லவும் திராணியுடைய தலைவர்கள் வேண்டும். அதுவே இந்தியாவில் மார்க்சியம் வளர வழி.

Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *