Contact Information

பொன்னுலகம் புத்தக நிலையம்
4/413 பாரதி நகர், 3வது வீதி,
பிச்சம்பாளையம்
திருப்பூர் - 641603
+91 8610193433
+91 7010484465
ponnulagampuththaganilaiyam@gmail.com

ஜனநாயகத்தின் அய்ந்து தூண்களைப் பற்றி இருக்கும் பிரமைகள் எப்போதோ தகர்ந்து விட்டன. மிச்சம்மீதி நம்பிக்கை நீதிமன்றங்கள் மீது இருப்பதாய் அவ்வப்போது சில மின்னல் கீற்றுகள் தென்படுவதுண்டு. அதுவும் மாயைதான். இளவரன், திவ்யா காதல் திருமணம், கலவரம், இளவரசன் சாவு ஆகியவற்றை முன் வைத்து அந்த நம்பிக்கை பொய்த்துப் போயிருப்பதை திருப்பூர் குணா இந்த நூலில் தகுந்த தரவுகளுடன் மெய்ப்பித்திருக்கிறார்.

இந்நூலில் இளவரசன் திவ்யா விவகாரம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகளின் மனப்பதிவுகளும் நடவடிக்கைகளும் எவ்வாறு இருந்தன என்பது ஒரு பகுதி. காதல் பிற்போக்குத்தனமான சாதியப் பொருளாதார வாழ்க்கையை பலவீனப்படுத்தும் அம்சங்களைக் கொண்ட பின்னணியை அலசும் கட்டுரைகள் கொண்ட இன்னொரு பகுதி. வன்னிய சாதி வெறியாட்டமும், இளவரசன் இழப்பு, இயக்கங்களின் வேலை என்ற தலைப்பிலான இரு கட்டுரைகளின் ஒரு பகுதி, கெட்டித்துப் போன இந்துத்துவ சாதிய சமூக அமைப்பைத் தாங்க முடியாமல்தான் ஆணாதிக்க சாதியத் தலைவர்கள் பெண்களைக் காப்பாற்றப் புறப்பட்டுள்ளதாக கபட நாடகங்கள் ஆடுவதை இக்கட்டுரைகள் தெளிவாக்குகின்றன. இந்த பிரச்சினை குறித்து வழக்கறிஞர்கள் ச.பாலமுருகன், இரஜினிகாந்த், செல்வி ஆகியோரின் கருத்துக் கட்டுரைகள் ஒரு பகுதி என்று கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

நீதிபதிகளின் செயல்பாடுகள் ஆணாதிக்கத் தன்மையுடையனவாக, அவர்கள் சாதிய இந்துத்துவ மனநிலையை அப்பட்டமாய் வெளிப்படுத்துவதையும் வழக்குரைஞர் இரஜினிகாந்த் அவரின் கட்டுரையில் விளக்குகிறார்.

திருப்பூர் குணா கவுரவக் கொலைகளை சாதிய ஆதிக்கம் மட்டும் நிகழ்த்தவில்லை; நீதிமன்றங்களும் நீதிபதிகளும் எப்படி நிகழ்த்துகிறார்கள் என்பதை விலாவாரியாய் விளக்குகிறார். நீதிபதிகள் ஏற்கனவே எழுதி வைக்க்ப்பட்ட முடிவுகளை வாசிப்பவர்கள் அல்ல. நிலைமை கருதி தேவையான புதிய நீதிகளை உருவாக்குகிறவர்களும் ஆவர் என்பதனை நீதிபதி கிருஷ்ணய்யர் போன்றோரின் சில தீர்ப்புகள் முன்னுதாரணமாக இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார். அதுபோல் நீதிமன்ற நடவடிக்கைகள் என்பது அதன் வளாகத்திற்குள் கொண்டு வரப்படும் செய்திகளை மட்டுமே கவனித்துக் கொள்வதல்ல. அது நாடெங்கும் நடைபெறும் அன்றாட நடப்புகளைத் தெரிந்து கொண்டு அதன் முக்கியத்துவம் கருதி தார்மீக நடவடிக்கைகளை தானாக முன்வந்து மேற்கொள்வது ஆகும். அதற்கான உரிமை நீதிமன்றங்களுக்கு உள்ளது என்பதை வலியுறுத்துகிறார்.

நீதிபதிகள் இப்போது நிலவும் சாதிய ஆணாதிக்க கட்டுப்பெட்டித்தனத்தை ஆதரிக்கிறார்கள். அவை நீடிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆகவே சமூகத்தில் நிலவும் சாதிய ஆணாதிக்கத்தின் பாதுகாவலர்களாக செயல்படுகிறார்கள். பெற்றோர்களுக்கு சாதகமான நிலைமைகளை உருவாக்கவும், பிள்ளைகளின் மனதை மாற்றவும் வேண்டுமென்ற உள்நோக்கத்துடனே நீதிபதிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பற்றி இயக்குனர் சேரனின் மகள் காதல் நடவடிக்கைகளை முன்வைத்து திவ்யா அலசுகிறார். நீதிபதிகள் பிடிவாதமாக திவ்யாவின் தாயார் நிர்பந்தத்தால் போட்ட ஆட்கொணர்வு மனுவை விசாரணைக்கு ஏற்றது முதல் நடந்த நடவடிக்கைகளை விலாவாரியாய் எழுதியுள்ளார். விசாரணை என்ற பெயரிலேயே நீதி மறுக்கப்படும் சம்பவங்களை எடுத்துக் கூறுகிறார். நீதிமன்றங்களில் காதல் விவகாரத்தை ஒப்படைத்தால் போதும் காதல் தானாகப் பிரிந்து விடும் எனும் போக்கு வளர்ந்து வருவதை சுட்டிக்காட்டுகிறார். நீதி என்பது பொதுமையானதாக, தார்மீகமானதாக இல்லாமல் நீதிபதிகளைப் பொருத்தே வழங்கப்படுவதை பல சம்பவங்கள் மூலம் விளக்குகிறார்.

இன்றைய நீதிபதிகளின் தன்மைகள் பற்றி அவர் முன் வைக்கும் தார்மீக அறங்கள் சார்ந்த வீழ்ச்சி குறித்த கீழே குறிப்பிடும் அம்சங்கள் கவலையுறவே செய்கின்றன. சராசரியாக வயித்துப் பாட்டுக்கானதும், முடிந்தால் சொத்து சேர்ப்பதற்குமான ஒரு தொழில் அல்லது வேலை வாய்ப்பு என்பதுதான் நீதிபதி பணி. நீதிபதிகளாக இருப்பவர்கள் சராசரி வாழ்க்கையை வாழ்கிறவர்கள்தான் என்பதற்கு மேல் ஒன்றுமே இல்லை. நீதிபதிகள் சராசரியாக இருப்பதன் மூலம் சாதிய சமுக வாழ்க்கை முறைகளையும் அதற்கான பிற்போக்குத் தனக்களையும் பாதுகாக்கிறார்கள். கட்சிகளில், ஆட்சி அதிகாரங்களில் சாதிய ஊர் விவகாரங்களில் அவற்றின் நிதி ஆதாரங்களில் சாதிய அனைத்து வகைச் செயல்பாடுகளில் சராசரி நீதிபதிகளாகிய அனைவருமே பங்கேற்கிறார்கள்; பலன் அடைகிறார்கள் என்பதைச் சொல்கிறார். சமீபத்தில் (அக்டோபர் 13 )பீகார் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு, எங்கும் ஒரே மாதிரிதான் நீதிபதிகள் செயல்படுகிறார்கள் என்பதைக் காட்டுகிறது. 1997 திசம்பர் முதல் நாள் இரவு பூமிகார் சாதியின் “ரன்வீர் சேனா” வின் நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்கள் 27 பெண்கள், 16 சிறுவர்கள் உட்பட 58 தலித்துகளை கொடூரமான முறையில் கொலை செய்த வழக்கிற்கு வந்துள்ள தீர்ப்பு குற்றஞ்சாட்டப்பட்டிருந்த சாதி இந்துக்களை “அய்யப்பாட்டின் பயன்” குற்றவாளிகளுக்குக் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் விடுதலை செய்துள்ளது.

சாதியின் பெயரால் மக்கள் சுரண்டப்படுவதையும், அரசியல் லாபத்திற்காக சாதி அமைப்புகள் திட்டமிட்டு பலப்படுத்தப்படுவதையும் இந்நூலில் உள்ள சொல்லாடல்கள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

சாதி மறுப்புத் திருமணங்களை இன்னும் நம் சமூகம் ஏற்றுக் கொள்ளாதபடி சாதிய இறுக்கம் இருந்து கொண்டிருக்கிறது. திருமணம் ஆயிரமாயிரமாண்டு காலமாக சமூகம், அரசு ஆகியவற்றால் வடிவமைக்கப்பட்டவையே என்பதைத் தொடர்ந்து காட்டுகின்றன. தற்போதைய திருமணங்கள் அரசியல் வரையறை ஆபாச எல்லைகளுக்குள்ளேயே நடந்தேறுகின்றன. இதில் வயது வந்த ஆணுக்கோ, பெண்ணுக்கோ எவ்வித விருப்பத்திற்கும் இடமில்லை. திருமணம் குறித்த சுதந்திரம் தனிமனிதருக்கில்லை என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகிறது.

தருமபுரி நாயக்கன் கொட்டாய் சாதி வன்முறை அரங்கேறி ஓராண்டு ஆன நிலையில் இப்புத்தகம் அந்த வன்முறையின் மையம், அதையொட்டிய தொடர்சம்பவங்களை முறையாக வரிசைப்படுத்தியும், நீதிபதிகளின் முறையற்ற பங்களிப்பைப் பற்றியும் குறிப்பிடத்தக்கப் பதிவாக அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த சமூக அமைப்பை மாற்றும் எத்தனங்களுடன் இயக்கங்களின் செயல்பாடுகள் இருக்க வேண்டிய அவசியம் பற்றியும் அந்த வகையான புரட்சிகர அமைப்புகள் பற்றியும் இந்த நூல் இறுதியில் வலியுறுத்துகிறது.

(காதல் – நீதிமன்றங்களின் கவுரவக் கொலைகள் : திருப்பூர் குணா. விலை ரூ 75. பொன்னுலகம் பதிப்பகம், திருப்பூர் 9486641586)

Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *